பகவத் கீதை வெண்பா

மேவியசீர்ப் பார்த்தன் வினவுரைத்தான் கண்ணனே
பாவியசீர்ச் சாத்திரத்தின் பாங்கொழிந்திங்-கோவா
விருப்புற் றியல்வார்க்கு மிக்ககுண மூன்றி
லிருப்பே தினியுரையா பிங்கு.        17.1

மேவிய சீர் பார்த்தன் வினவுரைத்தான்

நற்குணங்கள் பொருந்திய பார்த்தன் (பின்வருமாறு) கேள்வி கேட்டான்

கண்ணனே

கண்ணா!

பாவியசீர் சாத்திரத்தின் பாங்குஒழிந்து

பெருமைகள் நிறைந்த சாஸ்திரத்தின் விதியைக் கைவிட்டு

இங்கு

இவ்வுலகில்

ஓவா விருப்புற்று

நீங்காத சிரத்தையுடன்

இயல்வார்க்கு

யாகம் முதலானவற்றைச் செய்பவர்களுக்கு

மிக்க குணம் மூன்றில்

மிகுந்திருக்கும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் மூன்றில்

இருப்பு ஏது

நிலை எதிலே?

இனி இங்கு உரையாய்

இனி இவ்விஷயத்தைச் சொல்லுவாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top