பகவத் கீதை வெண்பா

பாண்டவர்க டங்கள் படைவகுத்த பாங்கதனைப்
பூண்டுமிக நோக்கிப் பொறாமையினாற் – றூண்டுபரித்
தேரார் துரோணன்பாற் சென்றடைந்து செப்பினான்
றாரார் துரியோ தனன்.   1.2

தார் ஆர் துரியோதனன்

(அரசர்க்குரிய) மாலையையணிந்த துரியோதனன்

பாண்டவர்கள் தங்கள் படை வகுத்த பாங்கு அதனை பூண்டு மிக நோக்கி

பண்டவர்கள் தங்களுடைய சேனையை அணிவகுத்திருக்கும் அழகை பயங்கொண்டு மிகவும் பார்த்து

தூண்டு பரி தேர் ஆர் துரோணன் பால்

தூண்டப்படும் குதிரைகள் பூட்டிய தேரில் வீற்றிருக்கும் துரோணாசாரியரிடம்

பொறாமையினால் சென்று அடைந்து

(பாண்டவ சேனையைக் கண்டதினால் வளர்ந்த) பொறாமையினால் சென்று அணுகி

செப்பினான்

(பின்வருமாறு) உரைத்தான்

பாரா ரியனேயிப் பாண்டவர்கள் சேனையினைத்  தாராரும் பாஞ்சாலன் றந்தமகன்சீரார்  மதியுடைமை நீகொடுத்த வண்மையினாற் காக்கும்  விதியுடைமை பூண்ட வியப்பு

ஆரியனே!

ஆசாரியனே!

தார் ஆரும் பாஞ்சாலன் தந்த மகன்

மாலை அணிந்த பாஞ்சால தேசத்தரசனுடைய குமாரனான திருஷ்டத்யும்னன்

சீர் ஆர் மதி உடைமை நீ கொடுத்த வண்மையினால்

நல்ல புத்தியுடைமையை நீர் கொடுத்த அந்த ஔதார்யகுணமே ஹேதுவாக

இப்பாண்டவர்கள் சேனையினை

இந்தப் பாண்டவர்களுடைய சேனையை

காக்கும் விதியுடைமை பூண்ட வியப்பு

காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் ஆச்சரியமான செயலை

பார்

காண்பீராக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top