பகவத் கீதை வெண்பா

சௌரியமு மிக்கொளியுந் தற்றுணிவும் தன்சமத்தும்
வைரியமர் நாணாமை வாய்ந்தகொடை – சீரியனா
யொக்கநிய மிக்குமது மோங்கரசர் தந்தன்மை
தக்க கருமமாஞ் சார்ந்து.           18.43

சௌரியமும்

போர்க்களத்தில் அச்சமின்றி நுழையும் தன்மையாகிற சூரத்தன்மையும்

மிக்கொளியும்

பிறரால் வெல்ல முடியாமையும்

தற்றுணிவும்

தொடங்கிய செயலில் இடையூறு நேர்ந்தாலும் தரித்து நின்று அதை நிறைவேற்றும் திறமையும்

தன்சமத்தும்

எல்லாச் செயலையும் நிறைவேற்றும் திறமையும்

வைரிஅமர் நாணாமை

போர்க்களத்தில் தனக்கு மரணம் உறுதியானாலும் பின்வாங்காமல் இருத்தலும்

வாய்ந்த கொடை

தன்பொருளைப் பிறர்க்கு அளித்தலும்

சீரியனாய் ஒக்க நியமிக்கும் அதும்

சிறப்பாக மக்கள் அனைவரையும் நியமிக்கும் திறமையும்

ஓங்கு அரசர் தம் தன்மை சார்ந்து தக்க கருமமாம்

ஆட்சி புரியும் அரசர்க்கு அவரவர் முன் வினையால் உண்டான செயலாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top